நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை கொலை செய்த மனைவி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அஞ்சுகுளி ரோட்டில் குடியிருந்து வந்தவர் பாண்டியராஜன் மகன் ராஜ்குமார் வயது (27). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் சோழவந்தான் அருகிலுள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா வயது(24) என்பவரை காதலித்து இருவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சபரி பாண்டி, மகாலட்சுமி, சரவண பாண்டி ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மேலும் மஞ்சுளா வேலைக்கு சென்றதால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த மஞ்சளா, நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். அதன்பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தன் கணவர் தனக்குத்தானே கழுத்தினை கயிற்றால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளார். இது சம்பந்தமாக தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் கொலை குறித்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் போலீசார் விசாரணைக்கு பயந்த மஞ்சுளா நேற்று கச்சைகட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் என்பவரிடம் நேரில் ஆஜராகி, தினந்தோறும் குடிபோதையில் தன்னை அடுத்தவருடன் தொடர்புபடுத்தி தகராறு செய்து வந்ததால் தனது கணவர் ராஜ்குமாரை கழுத்தை கயிற்றினால் நெறித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி ஜெயசீலன் கொடுத்த தகவலின் பேரில், வாடிப்பட்டி போலீசார் மஞ்சுளாவை கைது செய்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.