கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று துாக்கில் தொங்கவிட்ட மனைவி

பட்டுக்கோட்டை அருகே காசாங்காட்டில் கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று துாக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த காசாங்காடு தெற்குத்தெருவை சேர்ந்த விஸ்வலிங்கம். இவரது மகன் பிரகாஷ் (40). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 13ம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில் குடும்ப பிரச்சனையால் துாக்குமாட்டி இறந்ததாகவும், அதை போலீசாரிடம் தெரிவிக்காமல் மறுநாள் 14ம் தேதி பிரகாஷ் உடலை அவரது மனைவி நாகலெட்சுமி (35) வற்புறுத்தலின்பேரில் உறவினர்கள் எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகலெட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (25) என்பவருக்கும் தகாத உறவுகள் இருந்துள்ளதை பிரகாஷ் தெரிந்து கொண்டதால் பிரகாஷை நாகலெட்சுமி மற்றும் வீரக்குமார் இருவரும் சேர்ந்து கொலை செய்து துாக்கில் மாட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் ஊராரை நம்ப வைத்து நாடகம் ஆடியுள்ளனர். மேலும் யாருக்கும் சந்தேகம் வருவதற்கு முன்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நாகலெட்சுமியின் நாடகத்தை நம்பி பிரகாஷ் உடலை எரித்துவிட்டதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுக்கூர் போலீசார் நாகலெட்சுமியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாகலெட்சுமி தனது கள்ளக்காதலன் வீரக்குமாருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அதனை நாகலெட்சுமி கணவன் பிரகாஷ் பார்த்து விட்டதால், வேறு வழியின்றி பிரகாஷின் காலை நாகலெட்சுமி பிடித்துக் கொண்டுள்ளார். பிறகு பிரகாஷின் கழுத்தை வீரக்குமார் நெறித்துக் கொன்றுவிட்டு துாக்கில் தொங்க விட்டுள்ளார். அதன் பிறகு கணவன் பிரகாஷ் துாக்கிட்டு இறந்தாக நாகலெட்சுமி நாடகமாடியது தெரியவந்தது. உடனே இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து நாகலெட்சுமியை இன்று கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட வீரக்குமார், தென்காசி பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்துவரும் சூழலில் அவரை கைது செய்ய போலீசார் சென்றுள்ளனர். இறந்துபோன பிரகாஷிற்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.