கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை
தாம்பரம் அருகே கணவனை இறந்த தூக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகஸ்டின் (68). இவரது மனைவி உஷாராணி (63). ஓராண்டுக்கு முன்பு அகஸ்டின் வயது மூப்பு காரணமாக இயற்கை மரணம் அடைந்துள்ளார். கணவனை இழந்து ஓராண்டு காலமாக உஷாராணி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற உஷாராணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உஷாராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உஷாராணியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு உஷாராணிக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.
தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை இழந்த தூக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.