முன்விரோதம் காரணமாக பெண் கால்லால் தாக்கி கொலை - இளைஞர் கைது!

 
rmd murder

ராமநாதபுரம் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செய்யாமங்கலத்தை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி வழிவிட்டாள் (54).  இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த நீதிதேவன் என்கிற ஊமையனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி வழிவிட்டாள், செய்யாமங்கலம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ஊமையனுக்கும், வழிவிட்டாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. 

ramanathapuram

இதில், ஊமையன் கல்லால் தாக்கியதில் வழிவிட்டாள் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழிவிட்டாளின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், அபிராமம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஊமையனை கைது செய்தனர்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று வழிவிட்டாள் உயிரிழந்தார். இதனை அடுத்து, அபிராமம் போலீசார், கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.