திருப்பதி ஏழுமையான் தரிசன டிக்கெட் இன்று வெளியீடு.. ஆர்ஜித சேவைக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டும், ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளுன் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதி செல்ல முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு தொடர்ந்து திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்தவகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் விற்றுத்தீர்ந்தது.
இந்த நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் (ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்) இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் வழக்கம்போல் இன்று மாலை 4 மணி முதல் 29ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைனின், https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மொத்தம் உள்ள 46, 470 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் 8, 070 டிக்கெட்டுகள் குலுக்கல் முறை தேர்வுக்கு ஒதுக்கப்பட உள்ளது. மீதமுள்ள 38,400 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.