ஆடி மாத பூஜை - சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு..
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அந்தவகையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை செய்வார். அதன்பின்னர் பக்தர்கள் 18ம் படி வழையாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து நாளை ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யப்படும். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 21-ந்தேதி அத்தாழ பூஜை முடிந்ததும் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யலாம் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.