சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி வசூல்... ஒன்றரை கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றன!

 
samayapuram

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ1.09 கோடி ரொக்கப்பணம், ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றன.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனை தரிசினம் செய்வர். மேலும், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இரு முறை எண்ணப்பட்டு வருகிறது.

hundial

இந்த நிலையில், நடப்பு மாதத்தில் 2-வது முறையாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உதவி ஆணையர்கள் முன்னிலையில், கோவில் பணியாளர்கள், பக்தரகள் , தன்னார்வலர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் என ஏராளமானோர் காணிக்கைகளை எண்ணினர்.

இதில் பக்தர்கள் கோயில் உண்டியல்களில் கடந்த 13 நாட்களில் செலுத்திய காணிக்கைகளில் எண்ணியதில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 78 ஆயிரத்து 651 ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 1 கிலோ 699 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ 266 கிராம் வெள்ளியும், 402 வெளிநாட்டு கரன்சி  நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக, கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.