சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.41 கோடி வசூல்!

 
samayapuram

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.41 கோடி பணம், 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் வசூலாகி உள்ளது. 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர்.

hundial

இவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக் கடன்கள் மற்றும் உண்டியல் காணிக்கைகள் மாதம் ஒரு முறை எண்ணப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று, கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டனர்.

முடிவில் கடந்த 34 நாட்களில் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 834 வசூலாகி உள்ளது. மேலும், 3 கிலோ 802 கிராம் தங்கம், 5 கிலோ 317 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்ற நிலையில், டாலர் உள்ளிட்ட 99 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலானதாக கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.