"தருமபுரி மாவட்டத்தில் 10 லட்சம் பேர் ஆதார் விவரங்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்" - ஆட்சியர் சாந்தி தகவல்!

 
dharmapuri

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் விவரங்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சாந்தி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கி கடந்த 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள 12,29,285 மொத்த வாக்காளர்களில் 81.49 சதவீதம், அதாவது 10,01,662 வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

voter

மேலும், 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் எதிர்வரும் 8.12.2022 வரை படிவங்களை பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கெள்ளப்படுகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று நாளது வரை ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கும் வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்களுடைய ஆதார் விவரங்களை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்களது வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online / Correction of entries என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.