திருச்சியில் பொறியாளர் வீட்டில் 100 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
woraiyur

திருச்சி ராமலிங்க நகரில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் அபுதாபியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி விடுமுறை காரணமாக கடந்த 1ஆம் தேதி கனிமொழி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சீர்காழியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று மாலை அவர் ராமலிங்க நகருக்கு திரும்பி உள்ளார்.

woraiyur

அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, படுக்கை அறையில் உள்ள அலமாறியில் வைத்திருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்குகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து கனிமொழி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் பொன்னி உதவியுடன் சோதனை மேற்கொண்ட போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த  கொள்ளை சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.