பொள்ளாச்சியில் பைக்கில் கடத்திய 13 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்ற 13 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மார்க்கெட் சாலை முருகாலயா திரையரங்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து, வாகன ஓட்டியிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் குறிஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பதும், விற்பனைக்காக குட்கா பொருட்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார், அவரிடம் இருந்து 13 கிலோ குட்கா புகையிலை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான செல்வராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.