சங்கராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை!

 
robbery

சங்கராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்வர். இவரது மனைவி அனிஷா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். வெங்கடேஷ்வர் வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அனிஷா, குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, அனிஷா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் சங்காரபுரத்துக்கு வந்துள்ளார்.

sankarapuram

அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து  கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிஷா, உள்ளே சென்று பார்த்தபோது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ரொக்கப்பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.