திருச்சி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளி கைது!
திருச்சி அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ராஜேஷ்(22). கட்டிட தொழிலாளி. இவர் மணிகண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றுள்ளார். சிறுமி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இது குறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், இருவரும் இறைவன் நகர் பகுதியில் வாடைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராஜேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.