ஒட்டன்சத்திரத்தில் தனியார் குடோனில் பதுக்கிய 1,660 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!

 
dgl

ஒட்டன்சத்திரம் பகுதியில் தனியார் குடோனில்  பதுக்கி வைத்திருந்த 1,660 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில், எஸ்.பி தனிப்படை போலீசார் ஒட்டன்சத்திரம் -  தாராபுரம் சாலையில் தனியார் பள்ளி அருகே  உள்ள தனியார் குடோனில் சோதனை நடத்தினர்.

gutka

இந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, குடோனில் விற்பனைக்காக வைத்திருந்த 1,660 கிலோ குட்கா பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கியது தொடர்பாக, ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியை சேர்ந்த குடோன் உரிமையாளர் அஸ்ரப் அலி(31) என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை எஸ்.ஐ., கணேசன் மற்றும் போலீசாரை, மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.