அறந்தாங்கி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பலி!

 
drowning

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள திருநாளூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேஷ்வரர் பாண்டி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு நிவிஸ் பாண்டி(6), வித்திஸ் பாண்டி(4) என்ற 2 மகன்கள் உள்னர். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களை பல்வேறு இடங்களிலும் தேடினர்.

pudukottai

ஆனால் குழந்தைகள் இருவரும் கிடைக்கவில்லை. இதனால், சுந்தரேஷ்வரர் பாண்டி, அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார், சிறுவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள குளத்தில் சிறுவர்கள் நிவிஸ் பாண்டி மற்றும் வித்திஸ் பாண்டி ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து சுந்தரேஷ்பாண்டி அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.