பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி அக்கா, தம்பி பலி!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து அக்கா, தம்பி பரிதாபமாக உயிரிந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள எளையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தகள் கோவிந்தராஜ் - சாவித்ரி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்தனா(10) என்ற மகளும், பரணிதரன்(2) என்ற மகனும் உள்ளனர். கீர்த்தனா, அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் சாவித்ரி, குழந்தைகளுடன் பெத்தாம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்காலுக்கு குளிப்பதற்காக சென்றிருந்தார். பிள்ளைகள் இருவரும் வாய்க்கால் கரையில் அமர்ந்திருந்த நிலையில், சாவித்ரி துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தைகள் இருவரும் கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாவித்ரி குழந்தைகளை மீட்க முயன்றார். ஆனால், தண்ணீர் அதிகளவு சென்றதால் குழந்தைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும், சாவித்ரி வாய்க்காலில் உள்ள செடிகளை பிடித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் விரைந்து சென்று அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் காஞ்சிகோவில் போலீசார் கீழ் பவானி வாய்க்காலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணவேலம்பாளையம் அருகே கீர்த்தனாவின் உடல் மீட்கப்பட்டது. மேலும், மாயமான சிறுவன் பரணிதரனின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். கீழ் பவானி வாய்க்காலில் தவறி விழுந்து அக்கா, தம்பி பலியான சம்பவம் எளையம்பாளையம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.