தருமபுரி அருகே கார் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி, 6 பேர் படுகாயம்!

 
accident

தருமபுரி அருகே கார் மீது மின்கம்பங்களை ஏற்றிச்சென்ற லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன்(45). விவசாயி. இவரது வீட்டில் புதிதாக கார் வாங்கிய நிலையில், நேற்று சேலம் தாதகாபட்டியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டு உள்ளனர். பின்னர், அனைவரும் புதிய காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரப்பட்டி ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக அரூரில் இருந்து பாப்பிரெட்டிபட்டி நோக்கி மின்கம்பங்களை ஏற்றிச்சென்ற லாரி கார் மீது மோதியது. 

dharmapuri

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வேடியப்பன், அவரது உறவினர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பெண்கள், 3 சிறுவர்கள் என 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அ.பள்ளிப்பட்டி போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.