ஆறுமுகநேரி அருகே சாலை விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலி!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே இருசக்கர வாகன விபத்தில் 7 வயது சிறுவன் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கட்டனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவர் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று குடும்பத்தினருடன் சரக்கு வாகனத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள சீனந்தோப்பு பகுதியில் சென்றபோது, அன்னதானம் வாங்குவதற்காக கணேச மூர்த்தியின் மகன் யுகனேஷ் (7) சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு நோக்கி சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மோதியது.
இந்த விபத்தில் சிறுவன் யுகனேஷ் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த இசக்கிராஜா (21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த கார்த்திக் (20) பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆறுமுகநேரி போலீசார், காயமடைந்த கார்த்திக்கை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், விபத்தில் இறந்த இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.