தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கிடந்த 2 மாத பெண் குழந்தை... திருவண்ணாமலை அருகே பரபரப்பு!

 
infant

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே 2 மாத  பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் நாச்சியானந்தல் பகுதியை சேர்ந்தவர் முனியன். ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், முனியன் நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தையுடன் வேட்டவலம் அருகே உள்ள நெய்குப்பம் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அன்றிரவு உறவினரான ஏழுமலை என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தையை அழுததால் அதற்கு திவ்யா பால் கொடுத்து உறங்க செய்துள்ளார். பின்னர், அதிகாலை 5.30 மணி அளவில் திவ்யா எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என கூறப்படுகிறது. 

tiruvannamalai gh
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை தேடியபோது, அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில்  குழந்தை சடலமாக கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இருவரும் கதறி அழுதனர். தகவலின் பேரில் வேட்டவலம் போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குழந்தையை தண்ணீரில் வீசி கொன்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.