கோவில்பட்டி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பலி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கல்குவாரி குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியை சேர்ந்தவர் மதன். இவரது மகள் வைஷ்ணவி (16). இவர் கோவில்பட்டி அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவரது வகுப்புத்தோழி கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சேர்ந்த ஷேக் முகமது மகள் ஷகிலா. நேற்று பள்ளி விடுமுறையையொட்டி, ஷகிலா, தனது தங்கையும், 7ஆம் வகுப்பு மாணவியுமான ஜன்னத் அர்ஷ்யா (13) உடன் வைஷ்ணவியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
தொடர்ந்து, அதே பகுதியில் செயல்படாத நிலையில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்காக சென்றனர். அங்கு வைஷ்ணவி, ஜன்னத் அர்ஷ்யா ஆகியோர் தண்ணீரில் இறங்கி குளித்தபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஷகிலா, இதுகுறித்து அருகில் உள்ள கிராமத்தினரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, நாலாட்டின்புதூர் போலீசார், அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.