வீட்டுமனையை அளவீடு செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் - நில அளவையர் கைது!
சேலம் மாவட்டம் சங்ககிரியில் வீட்டுமனையை அளவீடு செய்ய லாரி உரிமையாளரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கஸ்தூரிபட்டியை சேர்ந்தவர் கணேசன். லாரி உரிமையாளர். இவர் தனது வீட்டுமனையை அளவீடு செய்யக்கோரி, சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, அங்கு நில அளவையராக பணிபுரியும் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த வைத்தீஸ்குமார்(40) என்பவர், வீட்டுமனையை அளவீடு செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கணேசன், இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர்.
அங்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனைப்படி கணேசன் நேற்று ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்தை, நில அளவையர் வைத்தீஸ்குமாரிடம் வழங்கினார். அப்போது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.