அரக்கோணத்தில் ரயிலில் கடத்தமுயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக வெளி மாநிலத்திற்கு ரயிலில் கடத்திச்சென்ற 2.5 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று சென்னையில் இருந்து மைசூரு செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் உஸ்மான் தலைமையிலான போலீசார், ஒவ்வொரு பெட்டியாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,ரயிலில் 40-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வெளி மாநிலத்திற்கு ரேஷன்அரிசி கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் சுமார் 2,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, ரேஷன் அரிசி வாகனம் மூலம் அரக்கோணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக அரக்கோணம் ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசியை கடத்திய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.