நாமக்கல் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலி!

 
accident

நாமக்கல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்(27). இவர் நேற்றிரவு நாமக்கல்லுக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அக்கியம்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தார். நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி அருகே வளைவில் திரும்பியபோது நவீன் வாகனத்தின் மீது எதிரே நாமக்கல் நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டதில் நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஆட்டோ ஓட்டுநர் சிராஜுதீன் என்பவர் பலத்த காயமடைந்தார்.

namakkal GH
அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிராஜுதீன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.