மதுரை அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட 2 பெண்கள் பலி!

 
drowned

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி உள்பட 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சேக்கிப்பட்டியை சேர்ந்தவர் நாகுபிள்ளை. இவரது மனைவி போதும்பொண்ணு. இவர், நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் கனிஷ்கா(7) உள்ளிட்டோருடன் கிராமத்தில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமி கனிஷ்கா ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.

madurai

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போதும்பொண்ணு, சிறுமியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் நீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்த இளைஞர்கள் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது, சிறுமி கனிஷ்கா மற்றும் போதும்பெண்ணு ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீரில் மூழ்கி சிறுமி உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.