வேலூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து 2 வயது சிறுவன் பலி!

 
dead body

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தியாகு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் கிருஷ்வந்த் என்ற மகன் உள்ளனர். தியாகுவும், அவரது மனைவியும் திருப்பத்துரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். இதனால் குழந்தை கிருஷ்வந்த், பள்ளிக்குப்பத்தில் உள்ள அவரது பாட்டி கவனித்து வந்தார்.

pallikonda

இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை குழந்தை கிருஷ்வந்த் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக எதிர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான். இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கிய நிலையில், அருகில் இருந்தவர்கள் தொட்டிக்குள் கிடந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிகொண்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை கிருஷ்வந்த் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தியாகு அளித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.