திருவண்ணாமலை அருகே குட்டையில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை பலி

 
drowned

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அருக குட்டையில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(24).  இவர்களுக்கு 2 வயதில் பூஜேஸ் ரிஸ்வஸ் என்ற மகன் உள்ளான். கார்த்தி சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் நிலையில், விஜயலட்சுமி வடமாதிமங்கலம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

dead

இந்த நிலையில், நேற்று விஜயலட்சுமி வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், குழந்தை பூஜேஸ் ரிஸ்வாஸ்  வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால், விஜயலட்சுமி அருகில் உள்ள வீடுகளில் தேடினார். அப்போது, வீட்டின் பின்புறமுள்ள குட்டையில் குழந்தை பூஜேஸ் ரிஸ்வாஸ் உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்தான். இதனால், அதிர்ச்சியடைந்த விஜயலெட்சுமி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த ஆரணி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.