திருப்பரங்குன்றத்தில் அரசுப்பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி!

 
accident

மதுரை திருப்பரங்குன்றத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 இளைஞர்கள் மீது அரசுப்பேருந்து மோதியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் படப்பட்டி தெருவை சேர்ந்தவர் கேசவன் மகன் சரவணன்(24). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான கவுதம்(24) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருநகர் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலையோர தடுப்புச்சுவரின் மீது அதிவேகமாக மோதியது. இதில் வாகனத்தில் இருந்து இருவரும் எதிர்புறமுள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் கிடந்த அவர்கள் மீது, அந்த வழியாக கோவை நோக்கிச்சென்ற அரசுப்பேருந்து மோதியது. இதில் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

madurai gh

பலத்த காயமடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.