பழனி அருகே இருசக்கர வாகன விபத்தில் 2 இளைஞர்கள் பலி!

 
accident

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் இடையபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ் கண்ணன்(34) மற்றும் பாலன்(36). நண்பர்களான இருவரும் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில், அதிகாலை சுவாமி தரிசனம் செய்வதற்காக, இடையப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி - தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரகாஷ் கண்ணன், பாலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனர். 

palani

இது குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.