குமரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி!

 
accident

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜா மணி. இவரது மகன் தேவஅரசு (20). இவர் கோவையில் கேட்டரிங் படித்து வந்தார். இதேபோல், ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் லிஜோஸ் (20). சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நண்பர்களான இருவரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு இருவரும், ஈத்தாமொழியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் தங்களது இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். 

kumari gh

பெரியவிளை பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, இவர்களது இருசக்கர வாகனங்களின் மீது மோதி விட்டு நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட தேவஅரசு அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த லிஜோஸை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குமரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலின் பேரில் ஈத்தாமொழி போலீசார், பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.