விழுப்புரத்தில் துணிகரம்... ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை!
விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு திருநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் நேற்று முன்தினம் காலை குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அன்று மாலை அனைவரும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான சோமசுந்தரம், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.