சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை... நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

 
judgment

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சரக்கோட்டுவிளை பகுதியை சேர்ந்த வினித்(25). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வினித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

arrested

இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளி வினித்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.