கரூர் அருகே துணிகரம்... சிமெண்ட் ஆலை ஊழியர் வீட்டில் 21 பவுன் நகை கொள்ளை!

 
robbery

கரூர் மாவட்டம் புலியூரில் தனியார் சிமெண்ட் ஆலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 21 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் பணிபுரிபவர் பிச்சை. இவர் ஆலை வளாகத்தில் உள்ள ராணி மெய்யம்மாள் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு பிச்சை குடும்பத்தினருடன் அருகில் உள்ள தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்றுள்ளார். பிரார்த்தனை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பியபோது, முன்புற கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்துள்ளது.

karur

இதனால் அதிர்ச்சியடைந்த பிச்சை, வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 21 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலிசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.