துறையூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!
திருச்சி மாவட்டம் துறையூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அன்பழகன்(64). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதியினர் இருவரும் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அன்பழகன், அவரது மனைவி ஆகியோர் திருச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று இருவரும் துறையூருக்கு திரும்பி உள்ளனர். அப்போது, அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அன்பழகன், துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.