மண்ணச்சநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை!

 
robbery

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஸ்ரீதேவி மங்களம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது மனைவி, மகனுடன் வசித்து வந்தார். இவரது மகன் இளநிலை மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று தந்தை, மகன் இருவரும் பெரம்பலூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும், இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு புறப்பட்டு சென்றார். திருமண நிகழ்ச்சி முடிந்து வந்த தந்தை, மகன் இருவரும் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

police

இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 26.5 பவுன் நகை , வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.