திருப்பூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது... 18 பவுன் நகை பறிமுதல்!
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 18 பவுன் நகையை மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள இடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் கடந்த 12ஆம் தேதி குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு, மறுநாள் வீடு திரும்பினார்.அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 13 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.43,000 பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் இடுவாய் அருகே உள்ள சின்னகாளிபாளையத்தில் தங்கியிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தென்காசியை சேர்ந்த அப்துல் ரசாக்(37), வலங்கைமானை சேர்ந்த விஜய்(29) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த மவுலானா யூசுப்(19) என்பதும், அவர்கள் மோகனசுந்தரத்தின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதேபோல், வேறு சில இடங்களிலும் அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேரையும் கைது செய்த மங்கலம் போலீசார், அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை, வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.