கோவையில் காரில் குட்கா பொருட்கள் கடத்திய 3 பேர் கைது... 224 கிலோ குட்கா பறிமுதல்!

 
gutka

கோவை தடாகம் அருகே காரில் கடத்திச்சென்ற 224 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் அருகே நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, கோவில்பாளையத்தில் இருந்து அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச்சென்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து, காரில் இருந்த 224 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரில் இருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த மதன் சிங்(22), இந்தர் குமார்(24) மற்றும் லட்சுமணன் என்பது தெரியவந்தது.

arrest

கோவை குரும்பப்பாளையம் பகுதியில் மளிகைக்கடையில் பணிபுரிந்து வந்த மதன் சிங், லட்சுமணன் ஆகியோர் கொரோனாவால் வேலை இல்லாததால் பெங்களுருவில் இருந்து குட்காவை கடத்திவந்து சில்லரை விலையில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இதற்காக கோவில்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.