நெல்லை அருகே காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது - 303 கிலோ குட்கா பறிமுதல்!

 
gutka

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே காரில் குட்கா கடத்திச்சென்ற 3 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 303 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க புரம் அருகே உள்ள வடக்கு அகஸ்தியர்புரம் பேருந்து நிறுத்தம் அருகே, காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

arrest

அதில் அவர்கள் கடையம் மாலிக் நகரை சேர்ந்த அஜ்மீர்அலி(36), முகமது ஹாலித்(32) மற்றும் ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது தௌபிக்(20) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் விற்பனைக்காக குட்காவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 303 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.