ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பாதுகாப்பு பணியில் 3000 போலீசார்... திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்!

 
srirangam

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை துவங்கி வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், ஜனவரி 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெற உள்ளது. ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட உள்ளது. இத்திருவிழாவையொட்டி,  ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஷ் மண்டபம் அருகே அமைக்கப்பட்டு உள்ள புறக்காவல் நிலையத்தை, நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.

srirangam

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் கார்த்திகேயன் பேசியதாவது - கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இந்த வருடம் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளூர், வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவலர்கள் அதிகளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 117 சிசிடிவி கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிப்புறத்தில் 92 சிசிடிவி கேமராக்களும் என மொத்தம் 209 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

srirangam

மேலும், ஒலி பெருக்கி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு செய்து, தகவல் தெரிவிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்றிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையரும், செயல் ஆணையருமான மாரிமுத்து, காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு மற்றும் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.