திருச்சி அருகே மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கனகவள்ளி(44). மாற்றுத்திறனாளி.  இவர் கடந்த சில நாட்களுக்கு முன் துறையூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு தாயுடன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வைரிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கனகவள்ளிக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில், கனகவள்ளி மற்றும் அவரது தாயார் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

uppiliyapuram

அப்போது, மர்மநபர்கள் வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 35 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கனகவள்ளி, உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.