இளையான்குடி அருகே துணிகரம்... வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகள் கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள மெய்யனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். சாமிநாதன் வெளி நாட்டில் பணிபுரியும் நிலையில், அம்பிகா தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அம்பிகா வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அம்பிகா உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மர்மநபர்கள் அவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 38 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்தது.

ilayangudiஇது குறித்து அம்பிகா, இளையான்குடி காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.