அவிநாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சக்தி நகரில் வசித்து வருபவர் விஷ்ணு பிரபு. இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர். விஷ்ணுபிரபு நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை அவிநாசிக்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான விஷ்ணு பிரபு மற்றும் லாவண்யா ஆகியோர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மர்நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 39 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

avinashi

இதுகுறித்து அவர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.