அணைக்கட்டு அருகே விவசாயி வீட்டில் 42 பவுன் நகை, ரூ.1.10 லட்சம் பணம் கொள்ளை!

 
robbery

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை, ரூ.1.10 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (48), விவசாயி. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாஸ்கரன் வீட்டை பூட்டி விட்டு, பிள்ளைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில், அதிகாலை வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், வீட்டில் தூங்கியவர்கள் மீது மயக்க மருந்தை தெளித்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து 42 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள்  மற்றும் ரூ.1.10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். பின்னர் பாஸ்கரன் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

anaikattu

இதேபோல், மர்மநபர்கள்  அருகில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் மணி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரது வீடுகளிலும் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.