திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 460 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
gutka

திண்டுக்கல் அருகே வீட்டில் சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 460 கிலோ குட்கா, கார் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழைக்காய் பட்டி பகுதியில் சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது அறிவுறுத்தலின் படி,  நேற்று தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலாண்டி ,சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, விஜய் மற்றும் போலீசார், வாழைக்காய்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டபோது, அங்கு  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

dgl

இதனையடுத்து, வீட்டிலிருந்த 460 கிலோ குட்கா, கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்காவை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக முகமது இஸ்மாயில் (32), தெளபிக் ராஜா (28) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.