மதுரையில் துணிகரம்... மருத்துவர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் கொள்ளை

 
robbery

மதுரை அருகே மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மேலக்கால் பி.கே.எம் நகரில் வசித்து வருபவர் ரோஸ்லின் மேரி. இவரது மகன் சென்னையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் ரோஸ்லின் மேரி, தனது வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து செல்போன் மூலம் ரோஸ்லின் மேரிக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, அவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். 

madurai

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து எஸ்எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.