திருச்சியில் ஆசாரி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் கொள்ளை!
திருச்சியில் ஆசாரி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி வயலூர் ரோடு அம்மையப்பநகரை சேர்ந்தவர் லட்சுமணன்(69). இவர் ஆசாரி வேலை செய்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகன் சண்முகம். இவர் மனைவி ஜெயஸ்ரீ உடன் வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்தார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 12ஆம் தேதி லட்சுமணன், குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு சென்றிருந்தார்.
பண்டிகை முடிந்து, நேற்று முன்தினம் இரவு சண்முகம், தனது மனைவியுடன் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து மர்மநபர்கள் 50 பவுன் தங்க நகைகள், மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த லட்சுமணன், இதுகுறித்து திருச்சி அரசு மருத்துமனை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சென்ற போலீசார், கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்து எடுத்துச் சென்றனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.