வந்தவாசி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 54 பவுன் நகைகள் கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

வந்தவாசி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 54 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த சில நாட்களுக்கு தனது மனைவியுடன், சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்கு புறபட்டு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்மநபர்கள், நள்ளிரவில் அவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து உள்ளே இருந்த 54 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

vandavasi

இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு திரும்பிய சீனிவாசன் கதவை திறந்துசென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும், வீட்டின் மேலே ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவில் சென்று பார்த்தபோது 54 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.