ஈரோட்டில் திருட்டு போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு!

 
cellphone

ஈரோடு மாவட்டத்தில் திருட்டு போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானது தொடர்பாக காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் துரித நடவடிக்கை காரணமாக ரூ. 8 லட்சத்து 37 ஆயிரத்து 491 மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட செல்போன்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

cellphone

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் எஸ்.பி-க்கள் ஜானகிராமன், கனகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சைபர் கிரைம் போலீசார், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.1.09 கோடி மதிப்பிலான 741 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.