வேலூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக்கொலை - 6 பேர் கைது

 
dead body

வேலூரில் 14 வயது சிறுமியை காதலித்த இளைஞரை, சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

வேலூர் சாயிநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி. இவரது மகன் கோகுல்(17). இவர் ஆட்டோ பழுநீக்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கோகுல், அதே பகுதியை சேர்ந்த ராஜகுரு என்பவரது 14 வயது மகளை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் கோகுலை கண்டித்து, தங்களது மகளுடன் சுற்றுவதை நிறுத்தும்படி கூறி உள்ளனர். ஆனால், கோகுல் தொடர்ந்து சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை ராஜகுரு மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் கடந்த மாதம் 24ஆம் தேதி இரவு சாலையில் நடந்துசென்ற கோகுலை வழிமறித்து சிறுமியுடனான காதலை கைவிட வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

arrest

அப்போது, அவர்கள் தாக்கியதில் கோகுல் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த சம்பவம் குறித்து கோகுலின் தந்தை கார்த்தி அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார்,கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை ராஜகுரு, அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், தண்டபாணி, மாதவன், செந்தில், சிட்டிபாபு ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில், கோகுல் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, கொலை முயற்சி என பதிவுசெய்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் 17 வயது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.