கபடி போட்டி நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல்... பெண் உள்பட 6 பேர் படுகாயம்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மீனவ கிராமத்தில் கபடி போட்டி நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி புதுக்குடி மீனவ கிராமம் உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை பொங்கல் விழாவையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. அப்போது, புதுக்குடியை சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இருதரப்பினரும் அரிவாள், கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி ஜான்பீட்டர் தலைமையில் தொண்டி போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் புதுக்குடி மீனவ கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.
மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த தொண்டி போலீசார் 3 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.