சேலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 66 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

சேலம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 66 சவரன் நகை மற்றும் ரூ.1.38 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ராஜாமணி. நேற்று முன்தினம் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, சுவாமி தரிசனம் முடித்து நேற்று அதிகாலை இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, அவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சின்னத்தம்பி, வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

salem

அப்போது, மர்மநபர்கள் தனியறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 66 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சின்னத்தம்பி, காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சின்னத்தம்பி புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.